தவிர்க்கவேண்டிய ஒரு வார்த்தையில்
துவங்குகிறது யுத்தம்.
வீசிஎறிந்திருக்கவேண்டிய
ஏதோ ஒரு சொல்லில்
நசுக்கப்படுகிறது
காலம் தாண்டிய நேசம்.
பகைமைக்குப்பையை
கோழிக்கால்களென
கிளறிக்கொண்டிருக்கின்றன
புறக்கணித்து மறக்கப்படாத
சொற்கள்.
ஈரம் நிறைந்த ஏதேனும் ஒரு சொல்
இளக்குகிறது
இரும்புக்கு நிகரான இறுக்கத்தை.
புன்னகையோடு உதிர்க்கும் சொல்
வளர்க்கிறது
தொலைந்துபோன உறவை.
பாறையாய் உறைந்துகிடக்கும்
மௌனத்தை உடைத்தெறிகிறது
உள்ளன்போடு
வந்து விழும் சொல்.
ஊக்கம் நிறைந்த ஒற்றைச்சொல்
எட்ட வைக்கிறது
வெற்றியின் இலக்கை.
பரிவுடன் உதிர்க்கும்
மயிலிறகு வார்த்தைகள்
மருந்தாகின்றன
தீராத மனவலிக்கு.
கர்வமற்ற பேச்சு குறைக்கிறது
இருஉள்ளங்களின் இடைவெளியை.
ஆழமான சொல்லின் துவக்கம்
அளிக்கிறது
அழியாத புதினத்தை
அழகான கவிதையை.
ஆனால்
பிரயோகிக்கும் தொனியிலும்
அடங்கியிருக்கிறது
தேர்ந்தெடுத்து உச்சரிக்கும்
நல்ல சொற்களுக்கான அர்த்தம்.